தமிழ்நாடு

பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்ட போலீசார். உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கரும்பிரான்கோட்டை பெரியகுளம் ஓடையில் அரசு மதுபான கடை அருகே, பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தையை யாரோ சிலர் ஓரடி ஆழத்தில் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

இந்நிலையில் நாய்கள் குழிக்குள் இருந்த குழந்தையை இழுத்து வெளியே போட்டதால் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் இறந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி போலீசார் இறந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை, மூன்று நான்கு தினங்களுக்கு முன்பு புதைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குழந்தை, அழுகிய நிலையில் இருப்பதால் ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பது தெரியவில்லை.

குழந்தை இறந்த பின் புதைக்கப்பட்டதா அல்லது உயிருடன் இருக்கும் போதே புதைக்கப்பட்டதா என்பது பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவரும். மேலும் இந்த குழந்தை யாருடையது எதற்காக இந்த பகுதியில் புதைக்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.