தமிழ்நாடு

நிதானமே ரஜினியின் வளர்ச்சிக்கு காரணம்: இயக்குநர் மகேந்திரன்

webteam

நடிகர் ரஜினிகாந்தை உடனே அரசியலுக்கு வரும்படி நெருக்கடி கொடுக்க வேண்டாம் என அவரது ரசிகர்களை திரைப்பட இயக்குனர் மகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக இன்று முதல் சந்திக்கிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்த சந்திப்பு, வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று காலை ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வந்த ரஜினியுடன் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

ரசிகர்கள் உடனான ரஜினிகாந்தின் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன், “உடனே அரசியலுக்கு வரும்படி நெருக்கடி கொடுக்க வேண்டாம். ரஜினியின் வளர்ச்சிக்கு அவரது நிதானமே காரணம். யாரிடமும் இல்லாத ஒரு ஈர்ப்பு சக்தி ரஜினியிடம் உள்ளது. ரஜினிகாந்த் நிதானமாக சொல்‌வதை பொறுமையுடன் கேட்டு நிறைவேற்றுவது ரசிகர்களின் கடமையாக இருக்க வேண்டும்” என மகேந்திரன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய தயாரிப்பாளர் கலைஞானம், நடிகர் ரஜினிகாந்த் எந்த முடிவை எடுத்தாலும், அதில் இருந்து பின்வாங்கமாட்டார். அதிர்ஷ்டம் வரும்போது யாரும் குறுக்கே நிற்க முடியாது‌. ரஜினிகாந்தின் வீட்டில் தற்போது சுக்கிரன் குடியிருப்பதாக கலைஞானம் தெரிவித்தார்.