தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை வழக்கு: 24 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கைது

webteam

பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கேரளாவில் போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுரக்குடி சந்திவெளி தோப்பு பகுதியில் கடந்த 1996-ஆம் ஆண்டு பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநள்ளாறு சுரக்குடி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில் சுதாகர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக தலைமறைவாகிவிட்டார். பின்னர், காரைக்கால் மாவட்ட நீதிபதி, சுதாகரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சுதாகர் கேரளா பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து கேரளா விரைந்த போலீசார் பத்தனம்திட்டா பகுதியில் தலைமறைவாக இருந்த சுதாகரை கைது செய்து காரைக்கால் அழைத்து வந்தனர். அவர் இன்று காலை மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.