தமிழ்நாடு

ராணிப்பேட்டை: பச்சிளங் குழந்தையை சூட்கேசில் வைத்து கால்வாய் அருகே வீசிச் சென்ற அவலம்

kaleelrahman

பிறந்து சில நாட்களேயான குழந்தையை சூட்கேசில் வைத்து கால்வாய் அருகே வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து பாணவரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த தப்பூர் கிராமத்தில் கால்வாய் அருகே மூடப்பட்ட நிலையில் சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. குழந்தை அழுகும் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் கால்வாயில் கிடந்த சூட்கேசை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது அதில், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் சூட்கேசில் இருந்ததை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுமனிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர், குழந்தையை மீட்டு, பாணாவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இச்சம்பவம் குறித்து பாணாவரம் காவல் நிலையத்தில், தப்பூர் கிராம நிர்வக அலுவலர் சுமன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குழந்தையை வீசிச் சென்றவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.