ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய, ஆய்வாளர் முனிசேகர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்த முனிசேகரை தென்மண்டல காவல்துறைக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக பெரியபாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் ராஜஸ்தான் சென்றிருந்தனர். கடந்த டிசம்பர் 13ஆம் தேதி கொள்ளையர்களுடன் நடந்த மோதலில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே, பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தக் குண்டு, சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்டது எனத் தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆய்வாளர் முனிசேகர் தென்மண்டல காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.