தமிழ்நாடு

சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மழை!

webteam

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு மழை பெய்தது.

சென்னையில் கிண்டி, ராமாபுரம், தியாகராய நகர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மீனம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. பகல் நேரங்களில் வெயில் வாட்டிய நிலையில், தற்போது பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 3 நேரத்திற்கும் மேலாக கனமழை‌ பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் எங்கும் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விழுப்புரம் ‌‌மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் விடிய விடிய‌ கனமழை பெய்தது. கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. அன்னவாசல், வயலோகம், குடுமியான்மலை, பெருமாநாடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

விருதுநகர் மா‌வட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பாளையங்கோட்டை, சுத்தமல்லி, ஆலங்குளம், மாறாந்தை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் மழை பெய்தது.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை சரிவர பொழியாத நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.