தமிழ்நாடு

“வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம்” - வானிலை ஆய்வு மையம்

நிவேதா ஜெகராஜா

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், அதனால் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் மழை குறையக்கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வருகின்றது. இந்நிலையில் நாளை (ஜூலை 11) வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால் தமிழ்நாட்டில் மழை வெகுவாக குறையும் என்று இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் நடந்த செய்தியாளர்களை சந்திப்பின்போது அவர் பேசுகையில், “வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். வரும் 11ஆம் தேதி வடக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அப்படி உருவாகும் பட்சத்தில் அதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு வெகுவாக குறையும்” என தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், “தென்மேற்கு பருவக்காற்று வலுவிழந்தது மற்றும் தமிழகத்தில் வெப்பச்சலனம் உருவாகியிருப்பது ஆகிய காரணங்களினால் இந்த பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு அதிகமாக மழை கிடைத்துள்ளது. இயல்பாக இந்த பருவகாலத்தில், குறிப்பாக, ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை 130.2 மி.மீ மழை தமிழ்நாட்டில் பெய்யும். ஆனால் இவ்வருடம் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 9 வரை மட்டுமே தமிழகத்தில் 127.5 மி.மீ மழை பதிவாகி உள்ளது” என தெரிவித்தார்.

வரும் நாட்களில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடையும் காரணத்தால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கேரள கர்நாடகப் பகுதிகளில் அதிக மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.