தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் - அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழு

நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் - அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழு

Veeramani

நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் நான்கு அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை செயலாளர் நசிமுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாயவிலைக்கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நான்கு அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.



இக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் செயல்படுவார் என்றும், உறுப்பினர்களாக வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர், குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி ஆகியோர் செயல்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கட்கிழமைகளில் இக்குழு கூடி நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதையும், சரியான நேரத்தில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அறிக்கை விபரங்களை உணவு வழங்கல் துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.