தமிழகத்தை கடந்த ஒரு வாரமாக அச்சுறுத்தி வந்த கஜா பயுல் நேற்று கரையை கடந்தது. கஜா புயலால், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம். புயலின் தாக்கத்தினால் இப்பகுதிக்கு ஊடகங்கள் இதுவரை செல்லாத நிலையில் புதிய தலைமுறை முதல்முறையாக இப்பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது தங்களின் அவல நிலையை புதிய தலைமுறையிடம் வெளிப்படுத்திய மக்கள் அரசு விரைந்து உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.
Read Also -> ஆக்ராவில் யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு!
அதிராம்பட்டினத்தில் ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். ஓட்டு வீடு, கூரை வீடுகள் புயல் காற்று வேகத்தால் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து காணப்படுகிறது. கிராம மக்களுக்கு வாழ்வாதாரமே ஆடும், மாடும், தோட்டமும்தான். ஆனால் பல ஆடு, மாடுகள் புயலின் தாக்கத்திற்கு உயிரிழந்ததுள்ளன. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஏராளமான தென்னை, வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். பல வருட பாதுகாப்பில் வளர்த்த தென்னை மரங்கள் சாய்ந்து கிடப்பதை காணும் விவசாயிகள் அடுத்த என்ன செய்வதென்று தவித்து வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் படகுகளும், வலைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இனி எப்படி மீன்பிடிக்கச் செல்ல முடியும் என அவர்கள் வேதனைப்படுகின்றனர்.
Read Also -> சொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு
இது எல்லாம் ஒருபுறம் இருக்க வீடுகளை இழந்த மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி சிரமப்படுகின்றனர். குழந்தைகளை வைத்துள்ளவர்களின் நிலைமை இன்னும் கொடுமையாக உள்ளது. களத்திற்கு சென்ற புதிய தலைமுறை செய்தியாளர்களிடம், அரசு உடனடியாக இன்றைய சாப்பாட்டிற்கு வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு நிவாரணப் பொருட்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
Read Also -> ‘கஜா’வை தொடர்ந்து மீண்டும் ஒரு தாழ்வு பகுதி
இதேபோல நாகை மாவட்டத்தின் வேதாரண்யம், கோடியக்கரை என மாவட்டத்திலுள்ள 54 மீனவ கிராமங்களையும் கஜா புயல் கபளீகரம் செய்துச் சென்றுள்ளது. கடலின் ஆக்ரோஷத்தால் தூக்கி வீசப்பட்ட படகுகள், ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. அதனால் இங்கேயும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களும் அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.