தமிழ்நாடு

சாலை விபத்தில் புதிய தலைமுறை செய்தியாளர் உயிரிழப்பு

Rasus

புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஆண்டிப்பட்டி செய்தியாளர் கோவிந்தராஜ், நேற்று இரவு சாலை விபத்தில் உயிரிழந்தார். 

தேனி மாவட்டம் மாயாண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). நேற்றிரவு இருசக்கர வாகனமும், கோவிந்தராஜ் அமர்ந்து சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடந்த கோவிந்தராஜ், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

கோவிந்தராஜின் உடல் இன்று ஆண்டிப்பட்டி அருகே உள்ள மாயாண்டிப்பட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு புதியதலைமுறையின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் மற்றும் பல செய்தியாளர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாயாண்டிப்பட்டியில் தனது 10 வயது மகள் மற்றும் தாயாருடன் கோவிந்தராஜ் வசித்து வந்தார். பத்திரிகைதுறையில் 12 ஆண்டுகள் அனுபவமிக்க இவர், புதியதலைமுறையில் கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாற்றியவர். அவரின் பிரிவால் குடும்பத்தினர், சக செய்தியாளர்கள், நண்பர்கள் மற்றும் புதியதலைமுறையும் வருத்தமடைந்துள்ளது.