தமிழ்நாடு

புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு: நேரில் ஆஜராவதிலிருந்து ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு விலக்கு

Veeramani

அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்மை கட்சியை விட்டு நீக்கியது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செலவத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அவதூறு வழக்கை ரத்து செய்யவேண்டும், விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்தார். வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிபதி அதுவரை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக இருவருக்கும் விலக்களித்து உத்தரவிட்டுள்ளார்.