போராட்டம் pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம்: நிதி நிறுவன மோசடி - காதில் பூ சுற்றி நூதன போராட்டம்

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை, சோழியாக்குடி, தொண்டி, தேவிபட்டினம், திருவாடனை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ பெண்களிடம் ‘செல்வி கோல்ட் பைனான்ஸ் நிதி நிறுவனம்‘ என்ற பெயரில், அடகு வைக்கும் நகைகளுக்கு கூடுதல் பணம் கொடுப்பதாகக் கூறி விளம்பரபடுத்தியுள்ளனர்.

இதையடுத்து அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்கள், கிராமம், கிராமமாக சென்று மீனவ பெண்களிடம் நகைகளை அடகு வைக்குமாறு கேட்டுக் கேட்டுள்ளனர்.

Fisherwomen protest

இந்நிலையில், நிதி நிறுவனம் அளித்த கவர்ச்சிகர விளம்பரங்களை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் சுமார் 100 பவுனுக்கு மேல் நகைகளை அடகு வைத்துள்ளனர். இதையடுத்து பெண்கள் அடகு வைத்த நகைகளுடன் நிதி நிறுவனம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவான நிலையில், நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மீனவ பெண்கள் கடந்த 13 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள், நிதி நிறுவனத்தில் இருந்து நகைகளை மீட்டுத்தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நகைகளை மீட்டுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

protest

இதையடுத்து இன்று ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம், திருவாடானை, தொண்டி, திருப்பாலைக்குடி, சோழியாக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் காதில் பூ சுற்றி டிஐஜி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் பாதிக்கப்பட்ட மீனவ பெண்கள் சார்பாக சிஐடியு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுவை ராமநாதபுரம் சரக டிஐஜி துரையிடம் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிழவியது.