தமிழ்நாடு

குடியரசுத் தலைவர் வருகை: சென்னையில் ஐந்தடுக்கு காவல்துறை பாதுகாப்பு

Veeramani

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, சென்னையில் ஐந்தடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா, பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னை வருகிறார். இன்று விமானம் மூலம் சென்னை வரும் குடியரசுத்தலைவர், ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை, தனி விமானம் மூலம் நீலகிரி புறப்பட்டு செல்கிறார். சென்னைக்கு வருகை தரும் குடியரசுத் தலைவருக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். அதிகாரிகளுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலக வளாகம், சட்டமன்ற மண்டபம் ஆகிய இடங்களில், காவல் ஆணையர் தலைமையில், சென்னை காவல் அதிகாரிகள், போக்குவரத்து காவல், கமாண்டோ படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட காவல்துறையினர் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் சென்னையில் செல்லும் வழித் தடங்களில், போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.