சென்னை திருவேற்காட்டில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டுள்ளார். காரில் வந்த விஜயகாந்தை தேமுதிக தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு உற்சாகமுடன் வரவேற்றனர்.
முகக்கவசம் அணிந்தவாறு மேடைக்கு அழைத்து வரப்பட்ட விஜயகாந்தைக் கண்டதும் தேமுதிக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின் முதல்முறையாக தேமுதிக நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றுள்ளார்.
அக்கட்சியின் 18 ஆவது தலைமை பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சி தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக ராமுவசந்தன் செயல்பட்டுவந்ததை அடுத்து விஜயகாந்தே தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக இருந்தார். தற்போது பிரேமலதா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 19 2018-ல் இருந்து பிரேமலதா தற்போது வரை கட்சியின் பொருளாளராக உள்ளார்.
அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது பற்றியும், தேர்தல் யுக்திகளை வழிவகுக்கவும் தேமுதிக நிறுவனத் தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.