தமிழ்நாடு

‘சுகாதார நிலையத்திற்கு செல்லவே பஸ் வசதி இல்லை’ - பல மணி நேரம் காத்திருக்கும் கர்ப்பிணிகள்

kaleelrahman

சத்தியமங்கலம் அருகே உள்ள விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் அடுத்த விண்ணப்பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு விண்ணப்பள்ளியை சுற்றியுள்ள சாணார்பாளையம், புங்கம்பள்ளி, அன்னேகவுண்டன்பாளையம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் மருத்துவ வசதிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர பரிசோதனைக்கு பேருந்தில் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பெண்கள் பரிசோதனை முடிந்து பிறகு ஊர் திரும்புவதற்கு பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நோயாளிகள் வசதிக்காக கட்டப்பட்ட நிழற்குடையின் ஒருபகுதி சிதைந்து அமரமுடியாலும் வழிப்போக்கர்கள் ஆக்கிரமிப்பாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதனால் அவர்கள் மழை காலங்களில் பேருந்துக்காக நீண்ட நேரம் சாலையில் நின்று கொண்டிருக்கின்றனர். சத்தியமங்கலம் கோவை சாலையில் உள்ள விண்ணப்பள்ளிக்கு அதிகமாக பேருந்துகள் இருந்தும் நிற்காமல் செல்கின்றன. ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தனியார் பேருந்துகள் மட்டுமே நின்று செல்லும். அதில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் சிரமத்தை போக்கும் வகையில் சத்தியமங்கலம் புளியம்பட்டிக்கு நகர்ப்புற பேருந்துகள் இயக்க வேண்டும் என கர்ப்பிணி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.