வைரல் காய்ச்சல் கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னை | வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி காவலர் உயிரிழப்பு!

ஜெ.அன்பரசன்

சென்னை அண்ணா நகர் காவலர் குடியிருப்பை சேர்ந்த மேனகா (26), சென்னை மத்திய குற்ற பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த மே மாதம் காவலரான சுகுமாரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது மேனகா 9 வாரமாக கர்ப்பமாக இருந்துள்ளார்.

கர்ப்பிணி

இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி திடீரென மேனகாவிற்கு அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டதால் அமைந்தகரையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், காய்ச்சல் குறையாததால் டெங்கு காய்ச்சலாக இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 31ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

பின்னர், பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்டது வைரஸ் மூளை காய்ச்சல் என்பது தெரிய வந்துள்ளது. இதில் காய்ச்சல் அதிகமாகி அவர் சுயநினைவு இழந்தார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேனகா, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண் காவலர் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.