தமிழ்நாடு

வீடியோ விவகாரம்: பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் மீது நடவடிக்கை கோரி ஜோதிமணி எம்.பி புகார்

kaleelrahman

பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக பா.ஜ.க.வின் கே.டி.ராகவன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தமிழக காவல்துறை டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, ஜோதிமணி எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில்... 'பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பில் இருந்த கே.டி.ராகவன் குறித்து ஆபாச வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கே.டி.ராகவனை முறையாக கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்று பா.ஜ.க நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது. இவைகளை கண்டிக்காமல் பா.ஜ.க தலைவர்கள் மவுனம் சாதிக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க.வினருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் மூலம் பா.ஜ.க.வினரால் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளது வெளிவருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இதே நிலை தொடர்கதையாகி வருகிறது.

இந்த அரசு பெண்களுக்கு தேவையான பாதுகாப்பை கொடுக்கும் என முதலமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளதன் அடிப்படையில் காவல்துறை இயக்குநரை சந்தித்து முறையாக புகார் அளித்துள்ளோம். பெண்களுக்கு தேவையான நியாயங்கள் இந்த ஆட்சியில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கே.டி.ராகவன் உட்பட பா.ஜ.க.வினரால் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் அடுத்தடுத்து எத்தனை வீடியோ வந்தாலும் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக காவல்துறை இயக்குநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். பா.ஜ.க.வில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் உருவாகியுள்ளது. எவ்வளவோ புகார்கள் வந்தும் இதுவரை பிரதமர் மோடி இதுபற்றி வாய்திறக்கவில்லை' என்று ஜோதிமணி எம்பி கூறியுள்ளார். அப்போது காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மகளிரணியினர் உடன் வந்திருந்தனர்.