விஜய் - விக்கிரவாண்டி மாநாடு புதிய தலைமுறை
தமிழ்நாடு

சேறும் சகதியுமாக தவெக முதல் மாநில மாநாடு நடைபெறும் இடம்... காவல்துறை சார்பில் மேலும் 4 கேள்விகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் இடம் மழையின் காரணமாக சேரும் சகதியுமாக மாறியுள்ளது. இதையடுத்து காவல்துறை சார்பில் மேலும் நான்கு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டுக்கான பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடல் பகுதியில் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக மாறியுள்ளது.

தவெக மாநாட்டு பணி

அதற்கிடையேவும், மாநாட்டிற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட மாநாட்டு பணிகளை பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி இன்னும் வலுத்துள்ளது.

இதையடுத்து காவல்துறை சார்பில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் மேலும் நான்கு கேள்விகள் முன் வைக்கபட்டுள்ளன. மாநாடு நடத்த காவல்துறை சார்பில் ஏற்கனவே 33 கேள்விகள் கேட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 4 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

அந்த 4 கேள்விகள் என்னென்ன?

1) மாநாட்டிற்கு மாவட்டம் வாரியாக வரும் வாகனங்களின் விவரங்கள் (கார், வேன், பஸ்) என்னென்ன?

2) வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருவதால், வாகனம் நிறுத்தும் இடத்தில் தண்ணீர் தேங்கினால், வாகனங்களை நிறுத்த செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன?

மாநாடு நடைபெறும் இடத்தில் தேங்கியுள்ள மழைநீர்;

3) மாநாடு நடக்கும் 40 ஏக்கரில் வாகனம் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டம் என்ன?

4) 1.5 லட்சம் மக்கள் வருவதாக வாய் மொழியாக தெரிவித்துள்ளதால், அதற்கு எந்த மாதிரியான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது?

என்று கேட்கப்பட்டுள்ளது.