தமிழ்நாடு

திரைப்பட பாணியில் நடந்த சம்பவம்: 200 சவரன் நகை நூதன திருட்டு; போலீஸ் விசாரணை

நிவேதா ஜெகராஜா

திருவள்ளூர் அருகே அதிமுக பிரமுகரும் ஒப்பந்ததாரருமான பாலமுருகன் என்பவர் வீட்டில் 200 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து பத்திரங்கள் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவள்ளூரையடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அதிமுக பிரமுகரான இவர் ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இன்னோவா காரில் வந்தவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் காரில் வந்து இறங்கி உள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த பாலமுருகனிடம், செங்கல் சேம்பர் தொழிலும் செய்து வரும் நீங்கள், தற்போது வாங்கிய செங்கல் சேம்பரை எந்த வருமான அடிப்படையில் வாங்கினீர்கள்?’ எனக் கேட்டு, அதற்கான பத்திரத்தை கொண்டு வரச் சொல்லி அது குறித்து விசாரிப்பதுபோல் விசாரித்துவிட்டு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், அதற்கெல்லாம் வருமான வரி செலுத்தியது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். பின்னர் வீட்டிலுள்ள நகை பணத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அப்படி அவர்கள் ஒப்படைத்த 200 சவரன் நகை 2 லட்சம் பணம் மற்றும்‌ சொத்து பத்திரங்கள் ஆகியவற்றைக் விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து 20 நிமிடத்தில் விசாரணை முடிந்ததாக கூறி 200 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து பத்திரங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கான எந்த ரசீதும் தராமல் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன் செவ்வாப்பேட்டைகாவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி காவல் துணை ஆணையர் மகேஷ் மற்றும் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் வீட்டு வாசலில் உள்ள கண்காணிப்பு காமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திரைப்பட பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.