தமிழ்நாடு

கன்னியாகுமரி: தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கிய குழந்தையின் சடலம்

கலிலுல்லா

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி சுடுகாடு அருகே உள்ள புத்தனார் கால்வாயில் மிதந்து வந்த ஆண் குழந்தை உடல் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 2 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றிய ஆரல்வாய்மொழி போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள தாழக்குடி அருகே புத்தனார் கால்வாயில் அப்பகுதி மக்கள் சிலர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் மிதந்து வந்து கரை ஒதுங்கிய நிலையில் கால்வாய் ஓரம் ஒரு குழந்தையை சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் நிகழ்விடம் வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்க்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிறந்து இரண்டு மாதம் ஆன ஆண் குழந்தையின் சடலம் கால்வாயில் எப்படி கரை ஒதுங்கியது , குழந்தையை கொலை செய்து தண்ணீரில் விசியுள்ளனரா ? குழந்தையை உயிருடன் வீசினார்களா ? குடும்பத்துடன் தண்ணீரில் தற்கொலையா ? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். 2 மாத ஆண் குழந்தை சடலமாக கால்வாய் தண்ணீரில் மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கால்வாய் கரையோரம் வசிக்கும் மக்களிடம் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.