செங்கல்பட்டு pt web
தமிழ்நாடு

செங்கல்பட்டு | பள்ளி அருகில் மாணவர்களான அக்கா, தம்பி காரில் கடத்தல் - தந்தை புகார்..தாயிடம் விசாரணை!

PT WEB

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒழலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேலன் (31). மனைவியின் பெயர் ஆர்த்தி(30). இத்தம்பதிக்கு ரட்சிதா (11) என்கிற மகளும், நித்தின் (7) என்கிற மகனும் உள்ளனர்.

கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வேலன் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கணவரைப் பிரிந்து ஆர்த்தி தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.

பிள்ளைகள் ஒழலூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளியில் படிக்கின்றனர். இதில், ரட்சிதா 6-ம் வகுப்பு மற்றும் நித்தின் 2-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், ரட்சிதா மற்றும் நித்தின் ஆகிய இருவரும் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் மதியம் உணவு இடைவேளையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காரில் இரண்டு பேரையும் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலன் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் ஆர்த்தியிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.