Police station pt desk
தமிழ்நாடு

ஈரோடு: தங்கும் விடுதியில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி - வட மாநிலத்தவர் குறித்து போலீசார் விசாரணை!

ஈரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் வட மாநிலத்தவர் தங்கியிருந்த அறையில் இருந்து நாட்டு கை துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

webteam

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சத்தி சாலையில் வேணுகோபால் என்பவருக்குச் சொந்தமான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 22ம் தேதி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேந்தர் உள்பட இருவர் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் 23ம் தேதி இருவரும் அறையை காலி செய்து விட்டு சென்ற நிலையில் சுரேந்தர் மட்டும் மீண்டும் வந்து அறை எடுத்து தனியாக தங்கியுள்ளார்.

தங்கும் விடுதி

இந்நிலையில் நேற்று சுரேந்தர் அறையின் சாவியை தங்கும் விடுதியில் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து 25ம் தேதி சந்தேகத்தின் பேரில் ஊழியர்கள் மாற்று சாவியைக் கொண்டு அறையை திறந்து சுத்தம் செய்துள்ளனர். அப்போது மெத்தையின் அடியில் நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், துப்பாக்கி, தோட்டாக்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகள், பதிவு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேந்தர் எதற்காக துப்பாக்கி எடுத்து வந்தார்? அவருடன் தங்கியிருந்த நபர் யார்? கொலை செய்ய திட்டமிட்டிருந்தனரா? எதற்காக துப்பாக்கியை தங்கும் விடுதியில் வைத்து விட்டுச் சென்றார்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.