தமிழ்நாடு

சென்னை ரயிலில் கீழிறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. படிக்கட்டாக மாறிய காவலர்கள்..!

சென்னை ரயிலில் கீழிறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. படிக்கட்டாக மாறிய காவலர்கள்..!

webteam

சென்னையில் நடுவழியில் நின்ற ரயிலில் தவித்த கர்ப்பிணி உள்பட பயணிகளை கீழே இறங்க, காவலர்கள் படிக்கட்டுகளாக மாறி உதவி செய்ததற்கு பாராட்டுகள் குவிகின்றன.

சிக்னல் கோளாறு காரணமாக சென்னை கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களில் இடையே பாதி வழியில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பெரும்பாலான பயணிகள் ரயிலை விட்டு இறங்கி நடந்து சென்றனர். ரயிலில் அமுதா என்ற கர்ப்பிணியும் பயணித்தார். ரயில் இடையில் நின்றதால் தண்டவாளத்திற்கும் படிக்கட்டிற்கும் இடையே அதிக தூரம் இருந்தது. இதனால் அவரால் கீழே இறங்க முடியவில்லை. அமுதா மட்டுமில்லாமல் வேறு சில முதியவர்களும் ரயிலில் இருந்த இறங்க முடியாமல் தவித்தனர். சுமார் 2 மணி நேரமாக கீழிறங்க முடியாமல் அவர்கள் ரயிலில் தவித்து வந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தமிழக காவல்துறையைச் சேர்ந்த தனசேகரன், மணிகண்டன் ஆகியோர் கர்ப்பிணி இறங்குவதற்கு ரயிலின்‌ வாசலில் படிக்கட்டு போல குனிந்து, தங்கள் முதுகில் சுமந்து அவர்களை இறக்கினர். கர்ப்பிணி மட்டுமில்லாமல் முதியவர்கள் ரயிலில் இருந்து இறங்கவும் அவர்கள் உதவி புரிந்தனர். காவலர்களின் மனித‌நேயமிக்க இந்த செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.