Armstrong, Thiruvenkadam pt desk
தமிழ்நாடு

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்? - காவல்துறை விளக்கம்

webteam

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை காவல்துறை விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம், மேலும் 2 கொலை வழக்குகள் உள்பட 5 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார். திருவேங்கடம் அளித்த வாக்குமூலத்தின்படி ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக, மணலியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டார்.

Armstrong murder case

இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் வாகனம் நிறுத்தப்பட்டபோது, காவலர்களை தள்ளி விட்டு விட்டு திருவேங்கடம் தப்பியோடி விட்டார். அவரை காவலர்களால் பிடிக்க முடியவில்லை. இதன் பின்னர், வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் பதுங்கியிருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயன்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் காவலர்களை நோக்கிச் சுட்டார். உடனடியாக காவல் ஆய்வாளர் தற்காப்பிற்காக திருவேங்கடத்தை சுட்டனர்.

இதில், காயமடைந்த திருவேங்கடம், மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது” எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.