தமிழ்நாடு

கொள்ளையன் நாதுராமை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு

கொள்ளையன் நாதுராமை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு

webteam

சென்னை கொளத்தூர் கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராமை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். 

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையின் மேற்கூரையை துளையிட்டு கடந்த நவம்பர் மாதம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆராய்ந்தனர். அதில் வடநாட்டைச் சேர்ந்த சிலர் பைகளுடன் செல்வது தெரியவந்தது. நகைக்கடைக்கு மேல் தளத்தில் கடை நடத்தி வைத்திருந்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள்  நகைகளைக் கொள்ளையடித்து தெரியவந்தது. தலைமறைவானவர்களை தேடி காவல்துறையைச் சேர்ந்த ஒரு குழு ராஜஸ்தான் விரைந்தது. 

கொள்ளையர்கள் குறித்து தகவல் சேர்ந்த காவலர்கள் அவர்களை கைது செய்ய விரைந்தனர்.அப்போது காவலர்களைக் கண்ட கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். பொதுமக்களும் காவலர்களை தாக்கியுள்ளனர்.இந்நிலையில் இதில் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன்பின்னர்தான் இந்த விவகாரம் சூடுபிடித்தது.காவல் ஆய்வாளரை கொள்ளையன் நாதுராம் என்பவன் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடைப்பெற்ற விசாரணையில் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆளான பெரியபாண்டியனை அவர்களிடம் மீட்க சக காவலர் தவறுதலாகச் சுட்டதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்தக் கொள்ளையன் நாதுராமை குஜராத்தில் வைத்து ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ள   நாதுராம், தினேஷ், பக்தா ராம் ஆகிய மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். சிறையில் உள்ள கொள்ளையர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை செய்ய ராஜமங்கலம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். நாளை நாதுராம் உள்ளிட்ட மூன்று கொள்ளையர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், இன்று காவல்துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர்.