தமிழ்நாடு

“பயப்படும் வகையில் மாணவர்களுக்கு கவுன்சிலிங்” - துணை ஆணையர் 

“பயப்படும் வகையில் மாணவர்களுக்கு கவுன்சிலிங்” - துணை ஆணையர் 

webteam

தவறு செய்யும் மாணவர்கள் பயப்படும் வகையில் கவுன்சிலிங் கொடுத்துள்ளதாக துணை ஆணையர் சுகுணாசிங் தெரிவித்துள்ளார். 

சென்னை அரும்பாக்கம் சிக்னல் அருகே சென்றுகொண்டிருந்த மாநகராட்சி பேருந்தில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கையில் பட்டா கத்தியுடன் இருந்த ஒரு மாணவர் மற்றொரு மாணவரான வசந்த் என்பவரை ரோட்டில் விரட்டி வெட்டினார். 

இதில் அந்த மாணவர் காயமடைந்தார். அதைத்தொடர்ந்து வெட்டிய மாணவர் உட்பட இரண்டு மாணவர்கள் பேருந்திற்குள் இருந்த மற்ற மாணவர்களையும் வெட்டினர். படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரூட் தல பிரச்னையால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை மாநில கல்லூரியில் மாணவர்களுடன் துணை ஆணையர் சுகுணாசிங் கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்லுறவு ஏற்படும் வகையில் பேசியுள்ளோம். பேருந்துகளில் வரும் மாணவர்கள் பற்றி பேருந்து பணிமனையிலும் தகவல் தெரிவித்துள்ளோம். ரூட் தல பிரச்னைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தவறு செய்யும் மாணவர்கள் பயப்படும் வகையில் கவுன்சிலிங் கொடுத்துள்ளோம்.” எனத் தெரிவித்தார். 

இதனிடையே சென்னை மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி, பச்சையப்பா கல்லூரி முதல்வர்களுடன் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.