தமிழ்நாடு

காஞ்சிபுரம்: அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை பறிமுதல் செய்த காவல்துறை

நிவேதா ஜெகராஜா

காஞ்சிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் அனுமதியின்றி வைத்து வழிபாடு செய்த இரண்டு விநாயகர் சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசானது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கும், விநாயகர் சிலை பொது இடங்களில் நிறுவதற்கும் தடை விதித்துள்ளது. 2 அடிக்கும் குறைவான உயரம் இருக்கக்கூடிய விநாயகர் சிலைகளுக்கு மட்டும், வீடுகளில் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது.

இன்று விநாயகர் சதுர்த்தி அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, காஞ்சிபுரம் புத்தேரித் தெரு பகுதியிலுள்ள பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வம் என்பரின் கடையில் இரண்டரையடி உயரமுடைய விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இது குறித்து அறித்த வந்த சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தகவல் அளித்தன் பெயரில், அங்கு விரைந்து சென்ற காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் வருவாய் துறையினர், இந்து சமய அறநிலையத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவ்விநாயகர் சிலையினை பறிமுதல் செய்து பாதுகாப்புடன் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியே சற்றுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

அதேபோல் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியிலுள்ள பாஜக நகர அலுவலகத்தில் கடந்த வருடம் வழிபட்ட விநாயகர் சிலையினை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதனை விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளர் சுந்தரராஜன் பறிமுதல் செய்து வருவாய் துறையினரின் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் உதவியோடு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு கொண்டு சென்றனர்.