சென்னை pt web
தமிழ்நாடு

5 வருடமாக ஆட்டம் காட்டிய குற்றவாளி; சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு நடுரோட்டில் மடக்கிய காவல்துறை

PT WEB

காசிமேடு காவல் நிலையத்தில் குற்றவாளி ஒருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், 5 வருடமாக காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காசிமேட்டில் இருந்து கிண்டி வரை ஆட்டோவில் பயணித்து வந்த குற்றவாளியை காசிமேடு காவல்துறையினர் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

சூதாரித்துக் கொண்ட ரவுடி சாந்தோம் சாலை சிக்னலில் ஆட்டோ நின்றவுடன் கத்தியுடன் மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள காவல்துறையினர் ரவுடியை மடக்கிப் பிடித்துள்ளனர். குற்றவாளிக்கு கைகாப்பு போட்டு ஆட்டோவில் காசிமேடு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதனால் சாந்தோம் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கையில் கத்தியுடன் இருந்த குற்றவாளியை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.