கைதான திருடர்கள் புதியதலைமுறை
தமிழ்நாடு

வேலூர்: பேங்க் சென்று திரும்புவோரிடம் நூதன திருட்டு.. தனிப்படை அமைத்து தட்டித்தூக்கிய போலீஸ்!

PT WEB

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வங்கிகளில் இருந்து பணம் எடுத்துச் செல்லும் வாடிக்கையாளர்களை நோட்டமிட்டு ஒரு கும்பல் நூதன முறையில் பணத்தை திருடி வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், குடியாத்தம் டி.எஸ்.பி ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பணத்தை திருடி வந்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது குடியாத்தத்தில் உள்ள ஒரு வங்கி அருகே இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வலம் வந்துகொண்டிருந்தனர். இதனால், அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த மேக்கல கொண்டைய்யா மற்றும் சஞ்சய் குமார் என்பதும், வங்கியில் இருந்து பணம் எடுத்துச் செல்லும் நபர்களை நோட்டமிட்டு பணத்தை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.