Anbumani CM Stalin pt desk
தமிழ்நாடு

”கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; இல்லையென்றால்..” - அன்புமணி ராமதாஸ்

கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

PT WEB

சென்னை கதீட்ரல் சாலையில் (அண்ணா மேம்பாலம் அருகே) தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு அதில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த பூங்காவை நேற்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில், பாமக தலைவர், அன்புமணி ராமதாஸ், பூங்கா நுழைவுக் கட்டணத்தை குறைக்க வேண்டுமென தனது எக்ஸ் வலைதள பதிவில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதில், ”சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்கான கட்டணம் ஏழை மக்களால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது சரியல்ல. நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பூங்காவில் உள்ள பிற வசதிகளை பார்வையிட தனித் தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள ரூ.250, பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட ரூ.150, இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண ரூ.50, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட ரூ.50, குழந்தைகள் சவாரி விளையாட்டுக்கு ரூ.50 என ஒருவர் பூங்காவின் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க ரூ.650 செலுத்த வேண்டும். இது மிக அதிகம்.

CM Stalin

செம்மொழிப் பூங்காவுக்கு இணையாக கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பூங்காவில் உள்ள அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க மொத்தமாக குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

அப்போது தான் பூங்கா உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.