தமிழ்நாடு

1088 மதிப்பெண் வாங்கியும் பிளஸ்-2 மாணவி தற்கொலை

webteam

பிளஸ்-2 வில் 1200க்கு 1088 மதிப்பெண் எடுத்த மாணவி, மதிப்பெண் குறைந்துவிட்ட மனவிரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் மயிலேறிபாளையத்தைச் சேர்ந்த மாணவி தாமரைச்செல்வி, தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார். பொதுத்தேர்வில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் எதிர்பார்த்த மாணவிக்கு 1088 மதிப்பெண் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், அவருடன் படித்த தோழிகள் பலர் எதிர்பார்த்தது போலவே 1150 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர். தனக்கு மதிப்பெண் குறைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் இரண்டு நாட்களாக மனவருத்தத்துடன் இருந்துள்ளார். வீட்டிலும் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்த மாணவியின் தாயார், திரும்பவந்து பார்த்தபோது, தாமரைச்செல்வி தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.