எதிர்ப்பு தெரிவித்த மக்கள் pt web
தமிழ்நாடு

கோயில் தொடர்பான கட்டடம்.. இடிக்க வந்த அதிகாரிகள்.. தேர் மண்டபத்திற்கு முன் சாமியாடிய பெண்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கோயிலுக்கான தேர் மண்டபத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரம் கிராமத்தில் உள்ள விநாயகர், காளியம்மன் கோயில் தேர்களை நிறுத்துவதற்காக, கிராம மக்கள் சார்பில் மண்டபம் மற்றும் அன்னதான கூடம் கட்டப்பட்டது.

ஆனால் அது, நத்தம் புறம்போக்கு இடம் எனக்கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கட்டடத்தை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வருவாய்துறையினர், உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் தலைமையிலான காவலர்களுடன் மூலசமுத்திரம் கிராமத்திற்கு சென்றனர்.

இதையறிந்த மக்கள், கட்டடத்தை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கட்டடத்தால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினர். அப்போது சில பெண்கள், தேர் மண்டபத்திற்கு அருகே சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், 45 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதால் கட்டடத்தை இடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.