கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் குப்பைகளை முறையாக அகற்றவில்லை என கூறி நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 வார்டுகளை கொண்ட குளச்சல் நகராட்சியில் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 மாதங்களாக குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், மருத்துவமனை, பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், குளச்சல் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, நகராட்சி அலுவலகம் முன்பு கட்சி சார்பின்றி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.