அதிகாரிகளுக்கு சாபம் விட்ட பெண்கள் file image
தமிழ்நாடு

"சாமி சும்மா விடாது" - கோவில் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்குச் சாபமிட்ட பெண்கள்!

PT WEB

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள  மினுக்கம்பட்டி ஓடை புறம்போக்கு பகுதியில் பாப்பாத்தி அம்மன், அங்காள பரமேஸ்வரி, கருப்பணசாமி ஆகிய கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு  மினுக்கம்பட்டி,  கைத்தியங்கோட்டை, பச்சலா  கவுண்டனூர், கூவக்காபட்டி, வேலாம்பட்டி உள்ளிட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 40 ஆண்டுகளாக வழிபாடு செய்து வந்தனர்.

கோவில் இடிக்கப்பட்ட போது

இந்தநிலையில் மினுக்கம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் கோவில்களை இடிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஊர் மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் உடனடியாக கலைந்து போகச்  சொல்லியுள்ளனர். அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் மாலை வரை கோவிலை இடிக்க விடாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சாமி ஆடிய ஆண்கள்

இதனையடுத்து அதிகாரிகள் வாடகைக்குப் பிடித்து வந்த ஜே.சி.பி ஓட்டுநரை “நீ கோவிலை இடித்தால், சாமி குத்தம் ஏற்படும். உனக்கு ஆபத்து உண்டாகும்” என்று சாபமிட்டனர். இதனால் பயந்து போன அவர் கோவிலை இடிக்க மறுத்து தப்பியோடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அரசு வேளாண் பொறியியல்  துறையைச் சேர்ந்த ஜே.சி.பி வாகனம் வரவழைக்கப்பட்டு கோவிலை இடிக்க முயன்றனர். அப்போது ஊர்மக்கள் சிலர் அருள் வந்து சாமியாடி கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஜே.சி.பி டிரைவருக்கு சாபம் விட்டனர். இதனால் அச்சமடைந்த ஜே.சி.பி டிரைவர் இடிக்க மாட்டேன் என்று கூறி வாகனத்திலிருந்து இறங்கினார். அப்போது அதிகாரிகள், “நீங்கள் அரசு ஊழியர், இது அரசுப்பணி. கண்டிப்பாக செய்துதான் ஆகவேண்டும்” என்று கூறி அவரை மீண்டும் ஜே.சி.பி வாகனத்தை இயக்க வைத்தனர்.

கதறிய அழும் மக்கள்

பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சுமார் 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பாப்பாத்தி அம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி சன்னதிகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.