தமிழ்நாடு

சென்னை மக்களே கவலை வேண்டாம்: ஏரிகளில் தேவையான குடிநீர் இருப்பு

webteam

சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து காரணமாக, கடந்த மாதம் 50 மில்லியன் கனஅடியாக இருந்த பூண்டி ஏரியின் நீர் இருப்பு 1,135 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் வற்றாமல் இருந்தால்தான் சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கமுடியும். கண்டலேறு அணையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி 30 டிஎம்சிக்கு மேல் நீர் இருப்பு இருந்ததால், தமிழகத்துக்கான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மற்ற மூன்று ஏரிகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துவருகிறது. இதனால் சோழவரம் ஏரியில் 110 மில்லியன் கனஅடியும் புழல் ஏரியில் 2,085 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,545 மில்லியன் கன அடியும் நீர் உள்ளது. மொத்தமாக ஏரிகளின் நீர்மட்டம் 4,876 மில்லியன் கன அடியாக இருக்கிறது.

சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளின் நீர்மட்டம் 5 டிஎம்சியை நெருங்குவதால், அடுத்த ஐந்து மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வடகிழக்குப் பருவ மழையால் நீரின் அளவு உயரும் வாய்ப்புள்ளதால் வரும் கோடையைச் சமாளிக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.