தற்கொலை PT
தமிழ்நாடு

பட்டுக்கோட்டை: கடன் தொல்லையால் 10 வயது மகளுடன் சேர்ந்து தாய் எடுத்த விபரீத முடிவு!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

PT WEB

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்தவர்கள், ராமநாதன் (வயது 45) - காளீஸ்வரி (வயது 35) தம்பதி. இவர்களுக்கு நிவ்யதர்ஷினி (வயது 10) என்ற ஒரு மகள் உள்ளார்.

ராமநாதன், பட்டுக்கோட்டையில் டீக்கடை வைத்திருந்து நஷ்மடைந்து அதன் பிறகு சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகின்றார். காளீஸ்வரி, தையல் பணி செய்வதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களது மகள் நிவ்யதர்ஷினி ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார்.

ராமநாதனுக்கு தொழிலில் நஷ்டம் அடைந்து பல லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டதால், கடன் பிரச்சனை தாங்காமல் சென்னை வந்திருக்கிறார் அவர். அவர் மட்டும் சென்னை வந்ததால், கடன் பிரச்னை தொடர்பாக அவரது மனைவிக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் காளீஸ்வரி அதிக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இச்சம்பவத்தால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த சூழ்நிலையில், காளீஸ்வரி தன் மகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் சந்தேகம் அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை நகர காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தாயும் மகளும் இறந்து கிடந்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல

இதையடுத்து பிரேதங்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் போலீஸார். மேலும் இந்த தற்கொலை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை பகுதிகளில் கடன் பிரச்சனையால் ஏற்படும் தற்கொலைகள் அதிகரித்து வருவது மன வேதனை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.