தமிழ்நாடு

ஜனவரியில் கட்சி தொடக்கம் : ரஜினி அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜனவரியில் கட்சி தொடக்கம் : ரஜினி அதிகாரபூர்வ அறிவிப்பு

webteam

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பு. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதியம் நிகழும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த 30 ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி தொடங்கினால் சாதக பாதகங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பாக பரப்புரை மேற்கொள்வது குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி ஆரம்பித்தால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி “மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு நடந்தது. அவர்களுடைய கருத்தை சொன்னார்கள். நானும் எனது பார்வையை சொன்னேன். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம் எனத் தெரிவித்தார்கள். நான் என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் வெளியிடுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்: