தமிழ்நாடு

அம்மாவும் அப்பாவும் எப்படியெல்லாமோ கொடுமைப்படுத்தினார்கள் - பதற வைத்த சிறுமியின் வாக்குமூலம்

webteam

பெற்றோர்கள் இருவரும் உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொடுமைப்படுத்தியதாக, குழந்தைகள் நல குழுமத்தினரிடம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 வயது சிறுமி புகார் தெரிவித்துள்ளார். மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த சசி மற்றும் கௌவுரி தம்பதியின் 4 வயது சிறுமிக்கு தந்தை மதுபோதையில் உடலில் சூடு வைத்தும், கடித்தும் கொடுமைப்படுத்தியதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் புகார் அளித்தனர். இதனையடுத்து  கரிமேடு  காவல்துறையினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்,

அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம் மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழுமத் தலைவர் ஜிம்.ஜேசுதாஸ் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர், சிறுமியின் உடலில் ஏற்படுத்தப்பட்டுள்ள காயங்கள். அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து புதியதலைமுறைக்கு குழந்தைகள் நல குழுமத் தலைவர்  அளித்த பேட்டியில் ”பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து உடலில் காயங்களை ஏற்படுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார். தற்போது சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது, இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைக்குப்பின் சிறுமியை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு, தேவையான பாதுகாப்பு மற்றும் கல்வி அளிக்கப்படும்” என தெரிவித்தனர்..