தமிழ்நாடு

“காதல் கணவருடனே செல்வேன்” - பெற்றோர் எதிர்ப்பால் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!

webteam

புதுக்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் தீபா (22). வளப்பிரமன்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் விவேக் (27). இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தகள் என்பதால் பெண் வீட்டார் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி தீபிகா தனது வீட்டை விட்டு வெளியேறி காதலன் விவேக்குடன் சென்றுள்ளார். இதையடுத்து பட்டுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து குடும்பத்திற்கு தெரிந்தால் பிரச்னை ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கேட்டு இருவரும் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் உஷாராணி, இரு குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இருதரப்பு பெற்றோர்களுடன் காவல் ஆய்வாளர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பெண் வீட்டார் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பெண் தன்னுடைய காதல் கணவருடன் செல்வதாகக் கூறியதையடுத்து தீபாவை விவேக் உடன் அனுப்பி வைத்தனர். மேலும் இவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என பெண் வீட்டாரை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.