சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பெண்  pt desk
தமிழ்நாடு

பழனி: தொடர் மழையால் இடிந்து விழுந்த சுவர்... சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பழனி அருகே உள்ள ஆயக்குடியில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன்.த

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த புது ஆயக்குடியில், 13வது வார்டு சாம்புகன் கோயில் அருகே மாரிமுத்து என்பவர், தன் மனைவி கற்பகம் (40) மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இப்பகுதியில் நேற்று தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த நிலையில், கற்பகம் கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது காமராஜ் என்பவரது வீட்டின் அருகே வந்தபோது, அவரின் வீட்டுச் சுவர் இடிந்து கற்பகம் மீது விழுந்துள்ளது.

இடிந்து விழுந்த சுவர்

இதில், தலையில் பலத்த காயமடைந்த கற்பகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் கற்பகத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.