ADMK pt desk
தமிழ்நாடு

பழனி: முன்னாள் அமைச்சர் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட அதிமுகவினர் - காரணம் என்ன?

webteam

செய்தியாளர்: அஜ்மீர் ராஜா

பழனியில் அதிமுக சார்பில் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நீர்ப்பந்தல் திறக்கும் விழா இன்று நடைபெற்றது. அதிமுக துணை பொதுச் செயலாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நத்தம் விஸ்வநாதன் தனது காரில் கிளம்பியுள்ளார்.

ADMK

அப்போது அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் நத்தம் விஸ்வநாதன் காரை முற்றுகையிட்டு ஒருவரை ஒருவர் குறை கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னணியில் பழனி அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் குறித்து ஒரு தவறான தகவலை அதிமுக பிரமுகர் ஒருவர் தனது நண்பர் மூலம் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, இவ்வளவு சிக்கலும் ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.