சிவராமன், அவரது தந்தை pt web
தமிழ்நாடு

யாரையும் காப்பாற்றும் முயற்சியா? சிவராமன், அவரது தந்தை இறப்பில் சந்தேகங்கள்; எதிர்க்கட்சிகள் கேள்வி

PT WEB

செய்தியாளர் நாமக்கல் எம்.துரைசாமி

10 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு கடந்த 5-ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படை NCC முகாம் நடந்துள்ளது. இதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 13 வயதான 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை என்சிசி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக, மாணவியின் புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவராமன் மற்றும் தனியார் பள்ளி முதல்வர் சதீஷ் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தேசிய மாணவர் படை சார்பில், எவ்வித பயிற்சி முகாமும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்தவில்லை என்றும், சிவராமன் போலியான என்சிசி அலுவலர் எனவும் தெரிவிக்கப்பட்டது. போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து போலி பயிற்சியாளரான சிவராமன் தலைமறைவானார்.

இந்த வழக்கில் தனியார் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, சமூக அறிவியல் ஆசிரியை ஜெனிஃபர், பயிற்சியாளர்கள் சக்திவேல், சிந்து, சத்தியா, சுப்பிரமணி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிவராமன்

வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராமனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதனிடையே கடந்த 19-ம் தேதி கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட துரிஞ்சிப்பட்டி அருகே உள்ள பொன்மலை குட்டை பகுதியில் பதுங்கியிருந்த சிவராமனை கைது செய்ய சென்றனர். அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடி உள்ளார். அப்போது பள்ளத்தில் குதித்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக எலி பேஸ்டை சாப்பிட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மேல் சிகிச்கிச்சைகாக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிவராமன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

சிவராமன், அவரது தந்தை

இதனைத்தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த உடல் அரசு அமரர் ஊர்தி மூலம் கிருஷ்ணகிரி அருகே அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சிவராமன் தந்தையும் உயிரிழப்பு

இந்த நிலையில் அவரது தந்தை அசோக்குமாரும் நேற்று இரவு மது அருந்திவிட்டு வந்தபோது சாலையில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

Annamalai | Krishnagiri | Sivaraman

சிவராமன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தெரிவித்தனர். இரு மரணங்கள் குறித்தும் காவல்துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

உயிரிழப்பில் எழும் சந்தேகம்

காவல்துறை கைது செய்வதற்கு முன்பு எலி பேஸ்ட் சாப்பிட்ட சிவராமன் எவ்வாறு உடல்நலத்தோடு இருந்தார்; அவர் எப்படி தப்பி ஓடினார் என்ற சந்தேகம் எழும் நிலையில் அவரது தந்தை நேற்று இரவு மது அருந்திவிட்டு வந்தவர் திடீரென சாலையில் விழுந்து உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகங்களுக்கு இவ்விரு உடல்களின் பிரேதப் பிரதேச சோதனை அறிக்கை வந்த பிறகு மரணத்திற்கான காரணங்கள் தெரியவரும்.

"சிவராமன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்" - சீமான்

மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில் விற்கும் எலி பேஸ்ட் உள்ளிட்டவைகளை அதிகளவு வாங்கி சாப்பிட்டு தற்கொலை மரணங்கள் நிகழ்வதாக கூறி தமிழக அரசு இதனை தமிழகத்தில் விற்பனைக்கு தடை விதித்தது. எலி பேஸ்ட் சிவராமனுக்கு எப்படி கிடைத்தது என்ற கேள்வியும் எழுகிறது.