செந்தில்பாலாஜி pt web
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி கைதாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு.. புகார் எழுந்தது முதல் ஜாமீன் மறுப்பு வரை ஓர் பார்வை

PT WEB

2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் அதில் இடம் பெறவில்லை.

senthil balaji

2016 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து முறைகேட்டு புகாரின்படி, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சம்மனும் அனுப்பியது. ஆனால், உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.

இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்ந்து வந்தது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் செந்தில்பாலாஜி.

அதே ஆண்டில் உச்சநீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை எனக் கோரியது.

2022 ஆம் ஆண்டு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தையும் நாடினார். இந்த வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

senthil balaji

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி நாள் முழுவதும் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மறுநாள் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சிறையில் இருந்தபடியே அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அனுமதி அளிக்காத சூழலில், இதுவரை 39 முறை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் செந்தில் பாலாஜி கைதாகி ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவர் மீதான வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.