தமிழ்நாடு

பேருந்தில் பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த பெண்கள்? - காவல்நிலையத்தில் புகார்

webteam

பேருந்தில் வந்த பெண்ணிடம் ஐந்து சவரன் நகையை பறித்துக்கொண்டு ஓடிய பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் தொடர்ந்து வழிப்பறி கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. தொளசம்பட்டி அருகேயுள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மனைவி பரிமளா. இவர் இன்று காலை ஓமலூரில் சொந்த வேலையாக தனியார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது அவரை சுற்றி நான்கு பெண்கள் நின்றுகொண்டிருந்ததாக தெரிகிறது. மேலும், நெரிசல் இல்லாத நிலையிலும் பரிமளாவை உரசியபடியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் ஓமலூர் வந்ததும் நான்கு பெண்களும் வேகவேகமாக பேருந்தில் இருந்து இறங்கி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பரிமளா கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க நகை மாயமனது தெரியவந்தது. 

பேருந்தை நிறுத்தி தேடி பார்த்தபோது நகை கிடைக்கவில்லை. பேருந்தில் வந்த சக பயணிகள், வேகவேகமாக இரங்கி ஓடிய நான்கு பெண்கள் தான் நகையை பறித்துக்கொண்டு ஓடியிருக்க வேண்டும் என்று கூறியதையடுத்து பரிமளா அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் பேருந்து நிலையம் முழுக்க தேடியும் அவர்களை காணவில்லை. 

இதையடுத்து நகை கொள்ளை குறித்து பரிமளா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண்களை தேடி வருகின்றனர்.