மைலாப்பூர் முகநூல்
தமிழ்நாடு

மயிலாப்பூர் | 15 வயது சிறுவன், 9 வயது சிறுமிக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த அவலம்...!

PT WEB

செய்தியாளர் - அன்பரசன்

சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா என்பவரை நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு மயிலாப்பூர் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் அவர்களின் பெற்றோர்கள் ‘குழந்தை திருமணம்’ செய்து வைத்ததுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமணம்

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹரிதா, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறார்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு வீட்டார் சம்மதத்துடன் குழந்தைகள் திருமணம் நடந்து முடிந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஹரிதா, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி சிறுமி மற்றும் சிறுவனை‌ மீட்டு கெல்லீஸ்சில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.‌

இந்த நிலையில், சிறுமியின் தாய், தந்தை, மற்றும் சிறுவனின்‌ தந்தை ஆகியோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தைகள் இருவரின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.