தமிழ்நாடு

பணத்தை தொலைத்த வடமாநில பட்டாசு வியாபாரி: 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வடமாநில பட்டாசு வியாபாரி தொலைத்த பணத்தை 1மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வடமாநில பட்டாசு வியாபாரி ஆனந்த் குத்வானி என்பவர் சிவகாசியில் பல்வேறு வகையான பட்டாசுகளை வாங்கி வடமாநிலத்தில் விற்று வருகிறார். இந்நிலையில் அவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கைப்பையில் வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் பணத்துடன் தொலைத்து விட்டார்.

இதையடுத்து பணப்பை தொலைந்தது குறித்து சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து உடனடியாக அவர் சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பையை வழிப்போக்கர் ஒருவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட போலீசார் பணப்பையை மீட்டு பட்டாசு வியாபாரியிடம் ஒப்படைத்தனர். பணத்தைத் தொலைத்து ஒருமணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுத்த காவல் துறையினருக்கு வடமாநில வியாபாரி நன்றி தெரிவித்தார்.