ஹவாலா பணத்துடன் சிக்கிய வடமாநில இளைஞர் pt desk
தமிழ்நாடு

ஈரோடு: போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் - ரூ.40 லட்சம் ஹவாலா பணத்துடன் சிக்கிய வடமாநில இளைஞர்

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பேருந்தில் செல்லும் வடமாநில நபரிடம் ஹவாலா பணம் இருப்பதாக பெருந்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் காவல்துறையினர் கோவை செல்லும் பேருந்துகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வடமாநில இளைஞர் கொண்டு வந்த பேக்கில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வடமாநில இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

Hawala Money

விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா ராம் (25) என்பதும் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் அவர், கோவையிலிருந்து பேருந்தில் பவானி சென்று பின்னர் அங்கிருந்து சித்தோடு பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஹிமா ராம் அணிந்துள்ள உடையின் வண்ணத்தை அடையாளமாக வைத்து அவரிடம் பேசிய நபரிடம் பத்து ரூபாய் தாளை கொடுத்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட அறிமுகம் இல்லாத நபர், பதிலுக்கு ட்ராலி பேக்கை கொடுத்துள்ளார்.

அதை வாங்கிக் கொண்டு பெருந்துறை வழியாக கோவை சென்று கொண்டிருந்தபோது ஹிமா ராம் காவல்துறையினர் பிடித்துள்ளனர். ஹிமா ராம் கோவையில் தனது சகோதரருடன் தங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹவாலா பணத்தை மாற்றும் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 40 லட்சம் பணத்தை வருமான வரித்துறை அதிகாரியிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். அயன் பட பாணியில் பத்து ரூபாய் தாளுக்கு ரூ.40 லட்சம் பணத்தைக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.