தமிழ்நாடு

வடமாநில இளைஞர் ‘ஓட ஓட வெட்டிக்கொலை’ - கும்மிடிப்பூண்டியில் கொடூரம்

webteam

கும்மிடிப்பூண்டி பகுதியில் வடமாநில இளைஞரை 10 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காட்டுக்கொள்ளை பகுதியில் தனியார் பள்ளிக்கு எதிரே வடமாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் அவரை, 10 பேர் கொண்ட கும்பல் துரத்தி சென்று, விரட்டி விரட்டி அவரை வெட்டியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸார் அங்கு வந்து பார்த்த போது, அந்த நபர் இறந்து கிடந்தார். 

சடலத்தை கைப்பற்றிய போலீஸார், உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் ஜெகனாத் என்பதும் தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும், கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.