விழுப்புரம் முகநூல்
தமிழ்நாடு

”சாப்பாட்டில் ஊறுகாய் வைக்கலையா?” - சட்டத்தை நாடிய வாடிக்கையாளர்.. ஹோட்டலுக்கு ஷாக் கொடுத்த உத்தரவு!

PT WEB

விழுப்புரத்தில் பார்சல் சாப்பாட்டிற்கு ஊறுகாய் கொடுக்காத பிரபல ஓட்டலுக்கு, நுகர்வோர் நீதிமன்றம் 35 ஆயிரத்து 25 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2022ஆம் ஆண்டு வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில், 25 பார்சல் சாப்பாட்டை 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். 11 வகையான உணவுப்பொருட்கள் இருப்பதாகக் கூறி வழங்கப்பட்ட அந்த பார்சல் சாப்பாட்டில், ஊறுகாய் இல்லாததால் ஏமாற்றமடைந்த ஆரோக்கியசாமி, சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு ஓட்டல் நிர்வாகத்தினர் சரிவர பதில் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆரோக்கியசாமி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சாப்பாட்டிற்கு ஊறுகாய் வழங்காமல் மனுதாரரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறி சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஊறுகாய்க்கு உரிய தொகையான 25 ரூபாயும் வழங்க உத்தரவிட்டது.

45 நாட்களுக்குள் பணத்தை கொடுக்காவிட்டால், மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் அபராதத் தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

விழுப்புரத்தில் சாப்பாட்டில் ஒரு ஊறுகாய் கொடுக்காமல் அலட்சியம் காட்டிய ஓட்டலுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், பலரையும் கவனிக்க வைத்துள்ளது.