தமிழ்நாடு

பள்ளிகளில் குழந்தைகளின் சாதி குறித்த தகவல் சேகரிப்பா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

கலிலுல்லா

பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் குறித்த விவரப் பதிவேட்டில் அவர்களது சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. அதில், பள்ளி மேம்பாட்டுக் குழுவுக்கான நிதி வழங்க ஏதுவாக 2020 - 21 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை அனுப்பாத பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், குழந்தைகள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரா, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவரா, பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா அல்லது சிறுபான்மையினரா அல்லது முற்பட்ட வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப் பட்டுள்ளது. ஒரு குழந்தையின் சாதியைக் கேட்பதற்கும் வகுப்பைக் கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது என்றும் பள்ளிக் கல்வித் துறை தெளிவுபடுத்தியுள்ளது.